காலையில் எழுந்தவுடன் தலைவலியா? நீங்கள் செய்யும் இந்த தவறுகள் தான் காரணமாக இருக்கலாம்!

சுகாதாரம் | வாழ்க்கை முறை | உடல்நலம்
குளிர் காலங்களில் பலருக்கு காலையில் எழுந்தவுடன் தலைவலி ஏற்படுவது ஒரு பொதுவான பிரச்சினையாக உள்ளது. சிலருக்கு இது லேசான வலியாக இருந்தாலும், சில நேரங்களில் கடுமையான தலைவலியாகவும் மாறுகிறது. இந்த நிலையை சாதாரணமாகக் கருதி புறக்கணிப்பது தவறானது என சுகாதார நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.

மருத்துவர்களின் கூற்றுப்படி, காலையில் ஏற்படும் தலைவலி பெரும்பாலும் ஊட்டச்சத்து குறைபாடு, நீரிழப்பு மற்றும் ரத்த ஓட்டக் குறைவு ஆகியவற்றுடன் தொடர்புடையதாக இருக்கலாம். குறிப்பாக குளிர்காலத்தில் உடலின் வளர்சிதை மாற்றம் குறைவதாலும், ரத்த ஓட்டம் சீராக இல்லாததாலும் மூளைக்கு போதுமான அளவு ஆக்ஸிஜன் செல்வதில் தடைகள் ஏற்படுகின்றன.

மேலும், மெக்னீசியம் குறைபாடு நரம்புகளில் அழுத்தத்தை ஏற்படுத்தி தலைவலிக்கு காரணமாகும். அதேபோல், வைட்டமின் B2 மற்றும் B12 குறைவால் மூளைக்கு தேவையான ஆற்றல் கிடைக்காமல், நரம்பு செயல்பாடுகள் பாதிக்கப்படுகின்றன. குளிர்காலத்தில் தண்ணீர் குறைவாக குடிப்பது நீரிழப்பை ஏற்படுத்தி, மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டத்தை குறைக்கிறது. இதுவும் தலைவலிக்கு முக்கிய காரணமாகும்.

அதோடு, இரும்புச்சத்து குறைபாடு காரணமாக ரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு குறைந்து, தொடர்ந்து தலைவலி ஏற்படும் வாய்ப்பும் உள்ளது. எனவே, இந்த அறிகுறிகளை அலட்சியப்படுத்தாமல் உடல்நலத்தில் கவனம் செலுத்துவது அவசியம்.

சுகாதார நிபுணர்கள் பரிந்துரைப்பதாவது, தலைவலியைத் தவிர்க்க சீரான மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உணவுகளை கட்டாயம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். மெக்னீசியம் பெற பாதாம், பூசணி விதை, கீரை, வாழைப்பழம் போன்றவற்றையும், வைட்டமின் B2 மற்றும் B12 க்காக முட்டை, பால், தயிர், முழுதானியங்களையும் உணவில் சேர்க்கலாம். இரும்புச்சத்தை அதிகரிக்க கீரை, வெல்லம், கொண்டக்கடலை மற்றும் பருப்பு வகைகள் சிறந்ததாகும். மேலும், வால்நட்ஸ், சியா விதை, ஆளி விதை போன்றவை தலைவலியை குறைக்க உதவும் கொழுப்பு அமிலங்களின் நல்ல ஆதாரங்களாகும்.

தொடர்ச்சியாக தலைவலி நீடித்தால், அதை சாதாரணமாக எடுத்துக்கொள்ளாமல் மருத்துவரின் ஆலோசனை பெறுவது அவசியம் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.